கேப்பாப்பிலவில் இரு குடும்பங்கள் போராட்டம் !

78 0

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான  நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு குடும்பங்கள் சனிக்கிழமை (27) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அயல்வீட்டுக்காரருக்கும் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக சனிக்கிழமை (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவேளை, வீட்டில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தனிமையில் இருந்தபோது, பிரச்சினைக்குரிய அயல்வீட்டு குடும்பஸ்தர், குறித்த வீட்டினுள் சென்று போதைப்பொருளை வைத்துவிட்டு, பொலிஸாரை அழைத்து வந்ததை தொடர்ந்து, இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல்வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தே இந்த இரண்டு குடும்பங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.