விவசாயிகள் பிரச்சினை: தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் – மு.க.ஸ்டாலின்

278 0

விவசாயிகள் பிரச்சினை தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:-

கேள்வி: -அனைத்துக்கட்சி கூட்டம் பற்றியும், விவசாயிகள் பிரச்சினை பற்றியும் சொல்லுங்கள்.

பதில்:- 19 நாட்களாக தலைநகர் டெல்லி மாநகரத்தில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய-மாநில அரசுகள் அதுகுறித்து அக்கறையோடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

அதேபோல, தி.மு.க. சார்பில் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். குறிப்பாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேரம் கேட்டு விவசாயிகளை எல்லாம் அழைத்துச் சென்று, அவர்களிடத்தில் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுகுறித்து கவனிப்பதாக சொல்லியிருக்கிறாரே தவிர இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்றைய தினம் தமிழகத்தின் நிதி அமைச்சர் ஜெயக்குமாரும் சென்று பிரச்சினைக்கு பரிகாரம் காணுவதை விட்டு விட்டு, அரசியல் நோக்கத்தோடு சில கருத்துகளை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்.

தமிழகத்தினுடைய முதல் – அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமியும் ஆர்.கே.நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காட்டும் அக்கரையை, விவசாயப் பிரச்சினையில் காட்டவில்லை என்பது வேதனைக் குரிய ஒன்று. அதைத்தான் இங்கே இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் என்னிடத்திலே எடுத்துச் சொன்னர்கள்.

நாங்கள் அவர்களை காலையில் சந்தித்த நேரத்தில், எப்படியாவது இதற்கொரு முடிவு கட்டுவதற்கு நீங்கள்தான், தி.மு.க.தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும், உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் என்று வேதனையோடு எடுத்துச்சொன்னார்கள். நானும் அவர்களிடத்தில் சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அதன்மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமா என்பதைப் பற்றி நாங்கள் யோசிப்பதாக சொல்லியிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளில் நிச்சயமாக தி.மு.க. ஈடுபடும்.

கேள்வி:- ஆர்.கே.நகரில் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியும், தினகரன் அணியும் பணப்பட்டுவாடா செய்கின்ற வேளையில், நேற்று இரவு பொருட்களும் விநியோகம் செய்ததாக தகவல் வந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறதா? எதிர்க் கட்சியைச் சார்ந்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது சம்பந்தமாக சில அதிகாரிகள், காவல்துறையை சார்ந்தவர்கள் அதற்கு துணை நிற்கிறார்கள் என்ற புகார் தந்து, அது நியாயம் என்பதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு அவர்கள் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல, பணப்பட்டுவாடா; பல பொருட்களை கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றுகின்ற அந்த பணியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், நிச்சயமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.