சிறந்த தலைமை ஆசிரியருக்கு அண்ணா விருது: ஜன.20-க்குள் பரிந்துரைக்க உத்தரவு

116 0

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருதுபெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம்ஊக்க நிதியும் தரப்படும். இதற்காகரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

மேலும், விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை மாநிலக் குழுவுக்கு ஜன.20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். குற்றவழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக் கூடாது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பட்டியலை தயார் செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.