ஒரு வாரமாக மழைநீரில் மிதக்கும் திருநின்றவூர் – பெரியார் நகர்

98 0

 திருநின்றவூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஒருவாரமாக மழைநீரில் மிதப்பதால் மக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த மழையினால் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி வழிந்தது.

இதனால், ஏரியை ஒட்டியுள்ள பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. ஒரு வாரமாக மழைநீரில் மிதக்கும் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும், பல குடும்பங்கள் தனியார் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீர், கழிவு நீரோடு கலந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.