தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்துவது கவலைக்குரியது!

123 0

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் பௌத்தப் பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்தும் முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றைய தினம்(10) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாது அவர்களது அனுமதியை பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளையும் தவறாக வழி நடத்திச் செல்லும் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இந்த நடவடிக்கையானது அவர்களது சொந்த நலன்களை பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களின் அரசியலை பலிக்கடாவாக்கும் செயற்பாடா என்று சந்தேகம் கொள்ள வேண்டி உள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்துவது கவலைக்குரியது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | Tamils Politics Migrabts Tamil National Federation

ஈழத் தமிழர்களால் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக நமது தேசத்தில் அயராத முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாக செயற்பட வேண்டுமே தவிர அவற்றை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

அவர்கள் முன் வைத்திருக்கும் பிரகடனத்திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது வேடிக்கையானது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பாகவே இருக்க முடியும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறாத கொள்கையோடு தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

 

அந்த அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டபோது, நல்லிணக்க நடவடிக்கையாக ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து தேர்தல்களை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.

அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இந்த நேரத்திலே புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைக்கான அதிகாரங்களை பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கின்ற கோரிக்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான நடவடிக்கையும் ஆகும்.

ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு, நமது கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம் ”குறிப்பிடப்பட்டுள்ளது.