நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: போராட்டக்குழுவிடம் ஸ்டாலின் உறுதி

319 0

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என போராட்டக்குழுவிடன் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.இந்த நிலையில் புதுக்கோட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை, நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, ராமநாதன் ஆகியோர் தலைமையில் 16 பேர் சந்தித்து பேசினர். அப்போது மு.க.ஸ்டாலினிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த மாதம் 15-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதியை சேர்ந்த 70 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற குரல் கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று உறுதிமொழி கொடுத்தனர்.

இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசும், ஜெம் என்ற தனியார் நிறுவனமும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகையால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடும் வரை நீங்கள் அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை தடை செய்வதற்கும் எங்களது வாழ்வாதாரம் பாழாகாமல் காப்பதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.

மனு கொடுத்து விட்டு வந்த நெடுவாசல் போராட்டக் குழுவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி கூறுகையில், நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்ததற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று உறுதிமொழி கொடுத்தனர்.

ஆனால் தற்போது இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் மற்றும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று எடுத்து கூறினோம். அதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவேன். உங்கள் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி அளித்தார் என்று தெரிவித்தனர்.