நெல்லையில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் போராட்டம்: வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கட்சி நிர்வாகி கைது

60 0

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் கருப்பு உடையணிந்து நேற்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். அழகிரிபங்கேற்கும் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தஅம்புரோஸ் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள்பயிற்சி பாசறை மாநாடு திசையன்விளையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும்அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலியில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் மகளிர் காங்கிரஸார் கருப்பு உடையணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி எம்எல்ஏ-வை கட்சித் தலைமை புறக்கணிப்பதாகவும், பெண்களுக்கு உரிய ஒதுக்கீடுவழங்கி பதவிகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த மகளிர் காங்கிரஸ் மாநில இணைச் செயலாளர் கமலாகூறும்போது, “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வருகிறார். அவரை மாற்றவேண்டும். இதேபோல, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமாரையும் மாற்ற வேண்டும்” என்றார்.

இந்நிலையில், அழகிரி பங்கேற்கும் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று வாட்ஸ்அப் குழுவில் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் கருத்து பதிவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மூன்றடைப்பு போலீஸார் விசாரணை நடத்தி, அம்புரோஸை கைது செய்தனர். இந்த சம்பவங்களால் திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.