ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

283 0

ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும் என முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட குழு சார்பில் நிதியளிப்பு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக அரசின் நிர்வாகம் தற்போது சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் வறட்சி நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை.

பயிர் கருகியதால் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினைகளை முன் வைத்து வருகிற 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும்.


தமிழகத்தை சுடுகாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

சுயேட்சையாகவும், தனித் தன்மையுடனும் இயங்க கூடிய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மட்டும் பாரபட்சமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழுவின் சார்பில் ரூ. 19½ லட்சம் நிதி முத்தரசனிடம் வழங்கப்பட்டது.