பாரிய வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

73 0

மஹா ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், தெதுறு ஓயா, தப்போவ, வெஹரலகல, லுனுகம்வெஹர, மவ்வார மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதி மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (20) சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது