ருவாண்டாவின் உள்ளூராட்சி அமைச்சரை சந்தித்தார் ஊவா மாகாண ஆளுநர்

95 0

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலுக்கு இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.

ருவாண்டாவில் நிகழ்த்தப்படும் 10வது பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற மாநாட்டுடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது 2023 பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற நிகழ்வின் வெற்றிக்கான பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வாழ்த்துச் செய்தியினை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சரிடம்   கையளித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் மற்றும் கொவிட்-19 தொற்று உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலைகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் எந்த வகையில் எதிர்கொள்வது, எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ள எவ்வாறு தயாராவது என்பது குறித்து கலந்துரையாடப்படும்.