நீதி கிடைக்கும் வரை மயிலத்தமடு மேச்சல் தரை போராட்டம் தொடரும் !

122 0

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரை தொடர்பான அறவழிப் போராட்டம் 61 நாட்களாக  சித்தாண்டியில், பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறும் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை (13) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மகாவலி திணைக்களத்தினால் தொடுக்கப்பட்ட குறித்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த பிரதேசத்தில் வசித்து வருவதற்கான தங்களது உறுதிப்படுத்திய வசிப்பதற்கான சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்  அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள்,நீதி மன்ற கட்டளையை தாங்கள் மதிப்பதாகவும் இதேபோன்று அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேபோல் கடந்த காலத்தில் கொழும்பு உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இதேபோன்றதொரு தீர்ப்பு உயர் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பித்தும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறவில்லை,பதிலாக சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு,அத்துமீறிய குடியேற்றம் மற்றும் கால்நடைகளுக்கு அநீதி விளைவித்தல் என்பன போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சரியான தீர்வொன்று கிடைக்கப்பெறும் வரை நாங்கள் இவ்விடத்தில் இருந்து எழும்பப்போவதில்லை.போராட்டத்தினை கைவிடுவதுமில்லை.எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது விடயத்தில் தலையிட்டு மேச்சல் தரை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

எனவே, நீதி மன்ற கட்டளையை நாங்கள் மதிக்கிறோம்.அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறியமைக்கான உறுதியான உத்தரவாதங்கள் இடம்பெறும்போதும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தும் போது நாங்கள் எங்களது போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக பரிசிலிப்பதாக தெரிவித்தனர்.