‘பொதுநலவாய உள்ளூராட்சி மாநாடு 2023இல் பங்கேற்பதற்காக ஊவா மாகாண ஆளுநர் ருவாண்டாவுக்கு விஜயம்

54 0

உள்ளூராட்சி நிறுவனங்களை நடைமுறைப்படுத்தும்போது எழும் பிரச்சினைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சவால்களை கவனத்தில் கொண்டு ‘உள்ளூராட்சி நிறுவனங்களின் மீள் தன்மையைச் சிறந்த முறையில் உருவாக்குதல்’ (Building resilience in local government to build back better) எனும் தொனிப்பொருளின் கீழ் ருவாண்டா குடியரசில் நடைபெறும் ‘பொதுநலவாய உள்ளூராட்சி மாநாடு 2023’இல் கலந்துகொள்வதற்காக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ருவாண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.

பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, ருவாண்டா தலைநகர் கிகாலியில் நாளை செவ்வாய்க்கிழமை (14) முதல் வெள்ளிக்கிழமை 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது ஆளுநர் ‘Smart and Human City is making through the Public Participation in the City Finance’ எனும் தலைப்பின் கீழ் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.