இஸ்ரேல் – பலஸ்தீன் ஆகிய நாடுகள் போரை நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) பலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றாென்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்துள்ள கடுமையான படுகொலை பேரவலத்தில், பயங்கரவாத அமைப்புகள் மூலமாகவும், அரச பயங்கரவாதத்தின் மூலமாகவும் மனிதக் கொலைகள் நடக்கின்றன இந்தப் படுகொலையில் குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள்,பொதுமக்கள் ஆகியோரின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள.
இத்தருணத்தில் மனிதப்படுகொலையை நிறுத்தி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒஸ்லோ இணக்கப்பாடுகளில் பல்வேறு தீவிரக் கருத்துகளைக் கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் கூட கலந்துரையாடல்களை நடத்தினர். எனவே இவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து நிலையான சமாதானத்தை நோக்கி நகர வேண்டும்.
பலஸ்தீன அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். ,இந்த இரண்டு அரசுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் அமைதியாக வாழ வேண்டும். எமது நாட்டு மக்கள் கூட அந்நாடுகளில் இருப்பதால் இவ்விடயத்தில் அமைதியாக இருக்க முடியாது. அதனால் இது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.