மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு….!

64 0

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் முரண்பாட்டினால் இலங்கைக்கு ஏற்பட கூடிய நேரடி தாக்கம்  மற்றும்  முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில்  ஒரு நாள்  சபை ஒத்திவைப்பு விவாதத்தை  நடத்துமாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மத்திய கிழக்கில் நிலவும் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும்.

மத்திய கிழக்கில் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்படுவார்கள்.அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதி சேவைகள்,வெளிநாட்டு முதலீடுகள்,சுற்றுலா கைத்தொழிற்றுறை ஆகிய சேவைத்துறைகள் பாதிக்கப்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவது அவசியமானது.

ஆகவே  இவ்விடயம் தொடர்பில் வியாழக்கிழமை (19) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எமது உறுப்பினர்கள் எவரும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் (கட்சித் தலைவர் கூட்டம்) கலந்து கொள்வதில்லை.

அதற்கான அனுமதியும் இதுவரை வழங்காத காரணத்தால் சபை அமர்வின் போது இந்த கோரிக்கையை நேரடியாக முன்வைக்கிறேன் என்றார்.

முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை கட்சித் தலைவர் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.