எதிர்க்கட்சித் தலைவர் சஜித், இலங்கைக்காக பலஸ்தீன தூதுவர் இடையில் சந்திப்பு!

81 0

பாலஸ்தீனமும், இஸ்ரேலும் நிலையான அமைதிக்காக ஒன்றிணைய வேண்டும் என, இலங்கைக்காக பலஸ்தீன தூதுவரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால், இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது என்றும், தாம் தற்காலிக அமைதியை விட நிரந்தர அமைதியையே நாடுவதனால், இவ்வாறான நிலையான அமைதிக்கான தீர்வை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இணக்கம் காணுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

நேற்று இலங்கைக்கான பலஸ்தீனத்துக்கான தூதுவரைச் சந்தித்து பலஸ்தீன நிலமைகளை கேட்டறிந்து, தமது கவலைகளை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தொடர்ந்து யுத்தம் நடந்தால் குழந்தைகள், தாய்மார்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும், இரு தரப்பு பொதுமக்களின் உயிருக்கு இனியும் ஆபத்து ஏற்படாமல் நிலையான அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த போரில் உயிரிழந்த மற்றும் குடும்பத்தை இழந்த இரு நாட்டு பொதுமக்களுக்கும் தனது இரங்கலையும், அநுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் கலந்து கொண்டார்.