யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

76 0

 யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (14.10.2023) மாலை 5.30 மணியளவில் இந்த  கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழிலிருந்து – முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதன்போது, இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.