கரோனா ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டதால் வாடகை, குத்தகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

119 0

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் மூடப்பட்டன.

இந்த காலகட்டங்களில் வணிகம் நடைபெறாத நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை பாக்கியைத் தள்ளுபடி செய்யக் கோரி நாமக்கல்லில் நகராட்சிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்துள்ள பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த கடைகளுக்கான வாடகை, குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்யுமாறு கடந்த 2021 டிசம்பரில் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி பொன்னுசாமி, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடைகள் மூடப்பட்டதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகை, குத்தகை பாக்கித் தொகை ரூ.136.44 கோடியைத் தள்ளுபடிசெய்து கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா காலகட்டத்துக்குப் பிறகு முறையாக வாடகையைச் செலுத்தி வருபவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.