களுபோவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழப்பு

65 0

கொஹூவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயதுடைய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

கொஹுவலை,  களுபோவில வைத்தியசாலை வீதியில் கொஹுவலையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, விபத்துக்குள்ளான  முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயில் கதவில் மோதியுள்ளது.

விபத்தில்  காயங்களுக்குள்ளான தாய் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக   கொழும்பு ரிஜ்வே சிறுவர்  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளது.

தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த குழந்தை நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொஹூவலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.