துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம் – ஜனாதிபதி

106 0

நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் மாற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தானம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆரம்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு மற்றும் புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இலங்கையை பொருளாதார மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க வேண்டும்.

கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை ‘கொழும்பு நிதி வலயமாக’ மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அந்த சட்டத்தை உருவாக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோல் இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக உறுதிப்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அதன்போது சிங்கப்பூருக்கு நிகராக எமது செலவீனங்கள் குறைவடைய வேண்டும்.

அதனால் சிங்கப்பூருடன் போட்டியிடும் இயலுமையும் எமக்கு கிட்டும்.

அந்த இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டுமெனில் எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு புளொக் செயின் மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட அபிவிருத்தி கண்டுவரும் துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையை செயல்திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய சட்ட சூழலை கொண்ட நாடாக மாற்றியமைப்பதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும் ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தூதுவர்கள், முன்னாள் தூதுவர்கள், இலங்கையின் அபிவிருத்து வேலைத்திட்டங்களுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன், மாற்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சர்வதேச மத்தியஸ்தானத்தின் பணிப்பாளர் நாயகம் தாரா ஜயதிலக்க உள்ளிட்டவர்களுடன் சட்டத்தரணிகள், இலங்கை முன்னணி நிறுவனங்களின் பிரநிதிகள் பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.