தங்கம் வென்ற முல்லைத்தீவு முத்தையன்கட்டு மாணவி

127 0

நடந்து முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் முத்தையன்கட்டு இடதுகரை தமிழ் வித்தியாலயம் இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளது.

16 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்ட முத்தையன்கட்டு இடதுகரை தமிழ் வித்தியாலய மாணவியான திருச்செந்தூரன் பிரியதர்ஷினி இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தரம் 10 இல் தன் கல்வியைத் தொடரும் பிரியதர்ஷினி கடந்த வருடமும் வலயமட்டப் போட்டிகள் மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டி தேசியமட்ட போட்டிகளில் கலந்து கொண்டிருந்தார்.

தங்கப்பதக்கங்களை தனதாக்கிய பிரியதர்ஷினி இரு போட்டிகளில் கலந்து கொண்டார்.

வலயமட்ட போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட அவர்,  400m மற்றும் 800m போட்டிகளில் முதலாமிடம் பெற்று மாகாணமட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்தார்.

கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய இந்த மாணவி எதிர்காலத்தில் தான் ஒரு விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற விரும்புவதாகவும் சிறு வயதிலிருந்தே தனக்கு விளையாட்டு மீது தீராத் தாகம் இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையிலும் வீட்டிலும் தன் விளையாட்டு முயற்சிகளுக்கு முழு ஆதரவு கிடைப்பதாகவும், முத்தையன்கட்டு விளையாட்டு கழகத்தின் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் தொடர்ந்து கிடைப்பதால் தன்னால் இலகுவாக வெற்றி இலக்கை அடைய முடிவதாவும் மேலும் குறிப்பிட்டார்.

விளையாட்டில் வெற்றிகளை தொடர்ந்து பெற்று வரும் இந்த வீராங்கனை தன் வாழ் வாதரத்தில் தோற்றுப்போயுள்ளமையை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தந்தை மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றார். குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளும் இவர்களது குடும்பம் விளையாட்டு மற்றும் கல்விக்காக உதவிகளால் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

விளையாட்டில் காட்டும் ஆர்வமளவிற்கு கல்வியிலும் ஆர்வத்தை காட்டி கற்று விடுமளவுக்கு இவர்கள் வாழும் சூழலில் வளங்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக விடயமாகும்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த மாகண மட்டப் போட்டிகளில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையின் சார்பாக அந்த பாடசாலையின் மாணவன் செல்வன் ஜெ.விதுசன் (ஜெயகாந்தன் விதுசன்) கலந்து கொண்டு விளையாடி 800m போட்டியில் முதலாமிடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தேசிய மட்டப் போட்டிகளில் இருவர் கலந்துகொள்ளும் வாய்ப்பு இம்முறை முத்தையன்கட்டு இடதுகரை தமிழ் வித்தியாலயத்திற்கு கிடைத்துள்ளமையும் பாராட்டுக்குரியதே.