சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

56 0

நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அமைச்சர்களிடம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நிலைக் கட்டணம், பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சரிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 12 தொழில்முனைவோர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பீக் ஹவர் கட்டணம் ஏற்கெனவே 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதத்தையும் குறைக்க வேண்டும், 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 12கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 5கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பீக் ஹவர் கட்டணத்தை ரத்துசெய்தால் அரசுக்கு ரூ.230 கோடிஇழப்பு ஏற்படும். மற்ற மாநிலங் களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்கட்டணம் குறைவாக உள்ளது.

மத்திய அரசின் உதய் திட்டத்தில் சேர, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கையெழுத்திடவில்லை. கடந்த ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி உதய் திட்டத்தில் கையெழுத்து இட்ட பிறகுதான் மின்கட்டணம் அதிகளவு உயர்ந்தது. இதற்கு மத்திய அரசும், முந்தைய அதிமுக அரசும்தான் காரணம்.

இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.