விசாரணைகளை முன்னெடுக்க விசேட அதிகாரியொருவர் களுபோவில வைத்தியசாலைக்கு விரைவு

59 0

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட அதிகாரியொருவர் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.

சிசுப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமொன்று அண்மையில் களுபோவில வைத்தியசாலையில் பதிவாகியிருந்தது.

குறித்த இரட்டை குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் அது தொடர்பில் பெற்றோரால் வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

சிசுக்களின் மரணம் தொடர்பில் கஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ஆம் திகதி பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்திருந்தது.மேலும், 23 ஆம் திகதி காலை மற்றைய குழந்தையும் உயிரிழந்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த குழந்தையின் மரணத்துக்கு சுவாசக்கோளாரே காரணம் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாவது குழந்தை உயிரிழக்கும் வரையிலும் எந்தவித அறிக்கையிலும் எந்தவித பிரச்சினைகளையும் குறிப்பிடவில்லை.

ஆனால் பிள்ளை காலையில் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். உயிரிழந்து விட்டார் என வார்ட்டுக்கு அறிவிக்கவும் இல்லை.

காலையில் செல்லும் போதே அறிவித்தனர். இது தொடர்பில் வைத்தியசாலையின் நிர்வாகத்தின் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எமக்கு நீதியை பெற்றுத் தாருங்கள். இதுபோன்றதொரு அநீதி மற்றுமாரு குழந்தைக்கு நடக்க கூடாது என கூறினர்.

இந்நிலையில், இரட்டை குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட அதிகாரியொருவர் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.