குப்பை குவியல் அருகே கிடந்த நடராஜர்உலோக சிலையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தனர். அதை கடத்தி வந்து போட்டுச் சென்றவர் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரி அருகே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த குப்பைக் குவியல் அருகே ஒரு கோணிப்பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பையை தூய்மைப் பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் திறந்து பார்த்தனர்.
அதில் 3 அடி உயரமுள்ள உலோக நடராஜர் சிலை இருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், தங்களது கண்காணிப்பாளர் தேவதாஸ் மூலமாக வேப்பேரி காவல் நிலையத்தில் நடராஜர் சிலையை ஒப்படைத்தனர். அந்த நடராஜர் சிலை எந்த கோயிலில் திருடப்பட்டது, யார் கடத்தி வந்து குப்பை குவியல் அருகே வீசிச் சென்றது என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.