பழனிசாமிக்கு எதிரான ரூ.4.800 கோடி முறைகேடு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் அக்.17-க்கு தள்ளிவைப்பு

70 0

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு எதிரான, ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் அக்.17-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டரை பழனிசாமி தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியதாக, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மட்டுமே வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வதில்லை” என்று கருத்து தெரிவித்து, விசாரணையை வரும் அக்.17-க்கு தள்ளிவைத்துள்ளனர்.