இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்துக்கான உலக வங்கியின் பணிப்பாளர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

152 0
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாகவும் இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளத்துக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் ஜேர்வோஸ் (Faris Hadad Zervos) தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று வியாழக்கிழமை (21) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், வட மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் எனவும் இறுதி யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி தற்போது நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் பணிப்பாளர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் வட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்துக்கு ஆதரவளிக்குமாறும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்படி, எதிர்காலத்தில் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் என இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்துக்கான உலக வங்கியின் பணிப்பாளர் உறுதியளித்தார்.