ரத்கம கொலைச் சம்பவம் : இருவர் கைது

137 0

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமெட்டிய மயானத்துக்கு அருகில் உள்ள கடுகம்ப பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக ரத்கம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ரத்கம, மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தின்போது உயிரிழந்தார்.

குறித்த இளைஞர் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்துள்ளதுடன் உடலில் காயங்கள் மற்றும் அவரின் கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை, கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேக நபர்கள் இருவரும் ரத்கம, பனிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்தவருக்கு இறுதியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரும் தங்களது தொலைபேசி தரவுகளை அழித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.