மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

107 0

உலக சமாதான நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை (21) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே உண்மையைக் கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் சமூக பொருளாதார  மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (21) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார  மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.