உலகலாவிய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை! -ஜனாதிபதி ரணில்

72 0

”நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலைமைகள் திருப்திகரமாக இல்லை” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் பாரிய அளவிலான வளப்பற்றாக்குறை அதற்குத் தடையாக காணப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்ததுடன், பல்வேறு துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப் போயிருந்தன. இது ஏற்கனவே நிலவும் உலகளாவிய கடன் நெருக்கடியை அதிகப்படுத்தியது.    இந்த சவாலான நிலை, இலங்கை உட்பட மேலும் பல்வேறு நாடுகளை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது.

இந்த சூழ்நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடியதாக இருக்கிறதா என்பது இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

எவ்வாறாயினும், இந்த சிக்கலான மற்றும் அச்சுறுத்தலான நிலைமையை வெற்றிகொள்ள உலகளாவிய நிதி மயமாக்கல் தீர்மானமிக்க நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.