மட்டக்களப்பு, உறுகாமம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

134 0

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை 1.30 மணியளவில் காட்டு யானைகள் அங்கிருந்த மின்சார வேலிகளை உடைத்துவிட்டு, ஊருக்குள் நுழைந்து அங்குள்ள வாழை, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயன்தரும் பயிர் வகைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அந்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள், மின்சார கம்பங்களும் நாசமாகியுள்ளன.

வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் காட்டு யானைகள் அழித்து நாசமாக்கியுள்ளதுடன், மக்கள் மயிரிழையில் உயர் தப்பி காயங்களுடன் ஓடியுள்ளனர்.

அத்தோடு, காட்டு யானைகளின் தொல்லையால் தங்கள் பொருளாதாரத்தையும் அந்த மக்கள் இழந்துள்ளனர்.

இந்நிலையில், யானைகளின் அட்டகாசம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டமும், அதனால் உயிராபத்துக்களும் காணப்படுவதால் அந்த கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.