மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி, வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டுகளில் நால்வர் கைது

54 0

மட்டக்களப்பு கிரான்குளத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரையும் வவுணதீவு கரவெட்டியில் வீடுகளை உடைத்து திருடிய இருரையும் நேற்று திங்கட்கிழமை (18) இரவு கைதுசெய்துள்ளதாக அந்ததந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் விஸ்ணு கோவில் வீதியிலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இரு வீடுகளை சம்பவதினமான நேற்று பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது வீட்டின் நிலப்பகுதியில் வடிகான் ஒன்றுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 120 லீற்றர் கோடாவை மீட்டதுடன் ஒருவரை கைதுசெய்த பொலிஸார்,  அந்த பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை முற்றுகையிட்ட போது ஒரு லீற்றர் கசிப்புடன் மற்றுமொருவரை கைது செய்தனர்.

அதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் 3 வீட்டுகளின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு யாழ்ப்பாணம், கதிர்காமம் போன்ற இடங்களுக்கு ஆலயங்களுக்கு சென்று திரும்பிய நிலையில் வீடுகளை உடைத்து ஒரு வீட்டில் 60 ஆயிரம் ரூபா பணம், மின்விசிறி, மற்றொரு வீட்டை உடைத்து அங்கு 40 ஆயிரம் ரூபா பணம், தொலைக்காட்சி, மின்விசிறியையும் மற்றொரு வீட்டில் கைத்தொலைப்பேசி ஒன்றும் திருடப்பட்டிருந்தன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நேற்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 20 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களில் கைதுசெய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.