யாழ்ப்பாண பல்கலைகழக மோதல் சம்பவம் – நாடாளுமன்றத்தில் வாதம்

378 0

cabinet656565யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், கண்டிய நடனம் 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளின் போது சேர்த்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் 1974க்கு பின்னர் தென்னிலங்கையின் கலாசாரங்கள் வட பகுதியை பொறுத்தவரையில், அதிகார ஆக்கிரமிப்பின் சின்னங்களாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தமது கருத்தை வெளியிட்டார்.
இனவாதத்திற்கு நாட்டில் எந்த ஒரு இடத்திலும் அனுதியளிக்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அடுத்ததாக உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவவர் ஆர்.சம்பந்தன், யாழ்ப்பாண சம்பவத்திற்கு பின்னால் அரசியல் பின்னணி உள்ளதா என்பதை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நல்லிணக்கத்தை தகர்த்து விடும் எனவும் சம்பந்தன் அச்சம் வெளியிட்டார்.
மஹிந்த ராஜபக்ஸ தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவும் இவ்வாறான சம்பங்கள் தொடர்ந்தும் இடம்பெறாதிருக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதன் போது கருத்துரைத்த அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தை அடுத்து தாம் உட்பட்ட அமைச்சர்கள் குழு, அங்குச் சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பல்கலைக்கழக சமூகம் மற்றும் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் தமது தெளிவான கருத்துக்களை தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழ் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
எனவே அங்கு தமிழ் சிங்கள மாணவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான எண்ணங்கள் இருக்கவில்லை.
எனினும் பல்கலைகழக நிர்வாகத்தின் கட்டுப்பாடு துரதிஸ்டவசமாக மீறிப்பட்ட நிலையிலேயே இந்த முறுகல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், 10 நாட்களுக்குள் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து தமது கருத்தை பகிர்ந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சம்பவம் இடம்பெற்ற உடன் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தம்முடன் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டார்.
இதன் போது தாம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜாவுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
சட்டம் மற்றும் ஒழுங்குதுறை அமைச்சரின் உடனடி நடவடிக்கை காரணமாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை எவருமே நியாயப்படுத்தவில்லை.
அனைவரும் சமாதாகமான முறையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதிலேயே முன்னின்று செயற்பட்டனர்.
எனவே அவர்களுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.