காணி தகராறு தீவிரமடைந்து ஒருவர் கொலை

62 0

நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ராகல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, சம்பவம் தினம் அன்று சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 41 வயதான வீட்டு உரிமையாளரான பெண்ணும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.