தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி கடற்றொழிலிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த கடற்றொழிலாளர்களை (21.08.2023)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த (04.08.2023) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் கடற்றொழிலில் ஈடுபட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குளத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் கடற்றொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களை விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதனையடுத்து நேற்று (08.08.2023) குறித்த வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட தமிழ் கடற்றொழிலாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சென்று முறையிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.