யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

73 0

யாழ்.வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.

இந்நிலையில் மாணவனுக்கு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.

இதன்போது ஆசிரியர் தன்னை கடுமையாக தாக்கியதாக பெற்றோரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாணவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் மாணவனிடம் வாக்குமூலங்களை பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இருப்பினும், சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நிர்வாக ரீதியிலான எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லையென எனவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.