கோயில்களின் பெயர்களில் ஆன்லைனில் நன்கொடை வசூல் முறைகேட்டை தடுப்பது எப்படி?

71 0

 கோயில்களின் பெயர்களில் இணையதளங்களை தொடங்கி ஆன்லைனில் நன்கொடைகள் வசூலிப்பதை தடுப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்க்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் முக்கிய கோயில்கள், மடங்களுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு நேரில் வர முடியாதவர்கள் கோயில் பெயர்களில் செயல்படும் இணையதளம் வழியாக நன்கொடை செலுத்துகின்றனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பெயரில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் உள்ளன.

தனிநபர் முறைகேடு: இந்நிலையில் முக்கிய கோயில் பெயர்களில் தனி நபர்கள் இணையதளங்களை தொடங்கி தவறான தகவல் அளித்து நிதி வசூலித்து முறைகேடு செய்து வருகின்றனர். இதை தடுக்க கோயில்கள் பெயர்களில் தனி நபர்கள் இணையதளம் தொடங்க தடை விதித்தும், அதுபோன்ற இணையதளங்களை முடக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவில் நீதிபதிகள் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அனுமதிக்க முடியாது: பின்னர், நீதிபதிகள் கோயில் பெயர்களில் போலி முகவரியில் இணையதளங்களை நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு இயங்கும் இணையதளங்களை கண்டறிந்து தடை செய்வது எப்படி? .

ஆன்லைனில் நன்கொடை வசூலிப்பதை தடுப்பதற்கான சட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய , மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.