ஈழத் தமிழ் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழப்பு

114 0

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனது வீட்டில் இருந்து நேற்று(01.08.2023) நடை பயிற்சிக்காக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.இலங்கை வானொலிக்கு பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர் ஆவார்.

விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் தனது நூல் வெளியீட்டை நடத்தச் சென்ற விமல் சொக்கநாதன் கடந்த மே மாதம் எமது யாழ் கலையகத்துக்கு வருகை தந்து சிறப்புச் செவ்வியொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.