தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக மக்களின் எழுச்சிப் பயண நிகழ்வின் 6ஆம் நாளான இன்று புதன்கிழமை (02) குறித்த மலையக பேரணிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் முல்லைத்தீவிலும் ஒரு நடைபவனி இடம்பெறுகிறது.
குறித்த பேரணியின் நடைபயணம் இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி நோக்கி தொடர்கிறது.
இலங்கைவாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டுச் சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மாண்புமிகு மலையகம்-200 நடைபயணத்தின் 5ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (01) குறித்த பேரணியின் நடைபவனியானது முருங்கனிலிருந்து ஆரம்பமாகி மடுவை அடைந்தது.
அதனை தொடர்ந்து, இன்றைய தினம் அந்த மலையக மக்கள் பேரணிக்கு வலுசேர்க்கும் வகையிலேயே முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையிலான மற்றுமொரு நடைபவனியில் இப்பேரணி இணைந்து ஈடுபடுகிறது.
‘மன்னார் முதல் மாத்தளை வரை’ என்கிற இந்த ஆதரவுப் பயணம் ‘இருப்பை உறுதிப்படுத்துவோம்; தோழமையை வலுப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடைபவனி காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகி, தற்போது கிளிநொச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நடைபயணத்தில், மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு, மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் A.C.G. இளைஞர் அணியினர், வர்த்தக சங்கத்தினர், விழுது நிறுவன ஊழியர்கள், அமரா, சமாசம், யுகசக்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பேரணியினருக்கு தாய்த்தமிழ் பேரவையினால் தாக சாந்தி வழங்கிவைக்கப்பட்டு ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.
தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடையணமானது இந்த ஆதரவுப் பேரணிக்கான சந்தர்ப்பமாக அமைகிறது.
மேலும், முல்லைத்தீவில் நடைபெறும் ஆதரவுப் பயணமானது மலையக மக்களின் சார்பான பேரணியினரின் கோரிக்கைகளுக்கு குறித்த மாவட்டத்தை சார்ந்த மக்கள் ஆதரவளிக்கும் விதமாகவும் மற்றும் அவர்களது ஆதரவினை திரட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இடம்பெறுகிறது.
இதன்போது இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாவதற்கு மலையகத் தமிழ் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்…
எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல், ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.
தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.
வாழ்வுக்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் / பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்ப பாதுகாப்பான காணி உரிமை, தமிழ்மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.
அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு.
பெருந்தோட்டங்களில் உள்ள மனித குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல், வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு, மலையக கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்தல், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.