சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது

77 0
ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ள சூழலில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர், ஸ்தாபன சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் சுற்றறிக்கையை பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லாததால் நாங்கள் அதை செய்ய மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தொடர்பான தவறான செய்திகள் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவுவதால், ஊடகங்கள் அல்லது பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்க ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சுற்றறிக்கையை வெளியிடும் தீர்மானத்தை சுகாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடுமையாக சாடியுள்ளனர்.