தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தென் மாவட்ட கல்லூரிகளில் ஆசிரியர்கள் போராட்டம்

67 0

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகளில் இன்று போராட்டம் நடந்தது.

மதுரை வக்பு போர்டு கல்லூரியில் நடந்த போராட்டத்துக்கு மூட்டா அமைப்பின் தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தார். தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும்,பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வுக் கென வழங்கிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.

செந்தாமரைக் கண்ணன் பேசும்போது, ”தமிழகத்தில், கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் போராடுகிறது. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போதைய அரசு தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை அமல்படுத்த வேண்டும். அனைத்து உதவி பெறும் கல்லூரிகளிலும் பணிபுரிபவர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் மூட்டா அமைப்பின் வக்பு போர்டு கல்லூரி யூனிட் தலைவர் டாக்டர் மும்தாஜ், செயலர் மீர் இஸ்மாயில், மூத்த பேராசிரியர்கள் ஆத்தியப்பன், வி.வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை சரஸ்வதி நாராயணன், யாதவா கல்லூரி மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகளிலும் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் இன்று நடைபெற்றது.