இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டுச் சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாண்புமிகு மலையகம்-200 நடைபவனியானது கடந்த 29 ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமை (01) மன்னார் மடு வீதியை அடைந்துள்ளது.
இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் மன்னார் மாவட்டத்திலுள்ள சகலரும் இனம் மதம் கடந்து அவர்களை உபசரித்ததுடன் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும் உண்டு.
இப்பகுதியிலுள்ள இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் பௌத்த மக்கள் மதத் தலைவர்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நடைபவனியில் செல்பவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (01) மற்றும் நாளை புதன்கிழமை (02) மடு வீதியில் விகாரை , கத்தோலிக்க தேவாலயம் மற்றும் வீடுகளிலும் தங்கியிருந்த பின் மீண்டும் குறிப்பிட்டப்படி வியாழக்கிழமை (03) தங்கள் நடைபயணத்தை ஆரம்பிப்பார்கள்.