கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது- படகு போக்குவரத்து பாதிப்பு

73 0

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றம், நீர் உள்வாங்குவது போன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட் டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. தொடர்ந்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.

சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்தனர். கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.