கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட செயற்கை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்!

126 0
கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26) 21 கோடி ரூபா பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருட்களுடன்  மூவரை சந்தேகத்தில் கைது செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹொங்கொங்கிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் மூலம் இவை  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் இவற்றை எடுத்துச் செல்வதற்காக மூவர் வந்தபோது, குறித்த பொதிகள்  அவர்களுக்கு முன்னால் திறக்கப்பட்டது, இதன்போது செயற்கை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ரஷ்ய பிரஜை உட்பட மேலும் மூவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப்புறங்களில் நடைபெறும் விருந்துகளின் போது இந்த செயற்கை போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக   தகவல் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.