சீன அட்டைப் பண்ணைக்காக யாழ், கிளிநொச்சி மக்களின் ஒற்றுமையை குழப்ப வேண்டாம்

153 0

மக்கள் பாரம்பரியமாக தொழில் செய்யும் கடற்பரப்பில் சீன கடல் அட்டைப்பண்ணையை விதைப்பதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மீனவ மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்தார்.

பாசையூர் கடற் தொழிலாளர் புதன்கிழமை (26) கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்டித்தலை கடற்பகுதியில் சிறகு வேலைத் தொழிலில் ஈடுபட்ட பாசையூர் மற்றும் குருநகர் சிறகு வலை தொழிலாளர்களின் வலைகளை கிளிநொச்சி நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி பிடுங்கியுள்ளனர்.

150 வருட காலமாக பரம்பரை பரம்பரையாக சிறகுவலைத் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் குறித்த அதிகாரிகள் செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எமது பாரம்பரிய மீனவர்களின் கடற்பரப்புகளை தொழில் முறைகளில் இருந்து அகற்றி சீனாவுக்கு  முழுக் கடலையும் தாரைவார்க்கப் போறீர்களா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் பரம்பரை பரம்பரையாக சிறகுவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்திணைகள உயர் அதிகாரி  நேரடியாக சென்று சிறகு வலைகளை பிடுங்கியுள்ளார் .

இவ்வாறு பிடுங்கிய கிளிநொச்சி மாவட்ட கடற் தொழில் நீரியல் வள அதிகாரியிடம் பாசையூர் மற்றும் குருநகர் சிறகுவலைத் தொழிலாளர்கள் நேரடியாகச் சென்று கேட்டபோது அதிகாரத் துணியில் நான் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என  கூறுகிறார்.

சிறகு வேலை தொழிலுக்கு அனுமதி எடுக்க வேண்டுமானால் குறித்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி இருக்க வேண்டும்.

அவ்வாற இல்லாவிட்டால் குறித்த பகுதி மீனவ சங்கங்களுக்கு அல்லது யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு அறிவித்திருக்க வேண்டும். குறித்த பகுதியில் முறையற்ற சிறகு வலைகள் இருப்பதால் அதை அகற்றுமாறு கூறி இருக்க வேண்டும்.

கால அவகாசம் வழங்காமல் தான் நினைத்தபடி மக்களின் வாழ்வாதாரத்தை கண்டு கொள்ளாமல் கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் அதிகாரி செயற்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் விரும்பினால் சீனாவுக்கு செல்லலாம் ஆனால் எமது மக்கள் பாரம்பரியமாக செய்து வரும் சிறகு வலைத் தொழிலை எமது கடற் பரப்பிலே செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி  மீனவ மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி சீன அட்டப்பணையை கடலில் விதைப்பதற்கான நடவடிக்கையை  குறித்த அதிகாரி மேற்கொள்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ் அமைச்சர் இருக்கிறார் தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள் ஏன் இந்த மக்களுக்கு சிறகுவலை தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனை விடுத்து அரசியல்வாதிகளை எடுபிடியாக செயற்படடும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் எமது வளமான எமது கடற்பரப்பை சீன அட்டைப் பண்ணைக்காக தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிடுங்கப்பட்ட  பாசையூர் குருநகர் சிறகு வலை தொழிலாளர்களின்  வலைகளை மனிதாபிமான முறையில் அந்த மக்களிடம் திருப்பி வழங்குவதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களை இணைத்து எமது மீனவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.