ஊர்காவற்துறை – காரைநகர் கடற்பாதை ஓட்டி விளக்கமறியலில்

77 0

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கி குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் , கடல் பாதையில் கடமையில் நிறை போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் மேலங்கி அணியாது, அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸார் ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பாதை ஓட்டியை கைது செய்து, நேற்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய வேளை நீதிமன்று அவரை 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.