மின்சார கட்டண அதிகரிப்பு சட்டப்பூர்வமானதா ? ஆராய குழுவொன்றை அமைக்கவும்

91 0

இலங்கை மின்சாரசபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களுக்கு முரணாக மின்சார கட்டண திருத்தம் மேற்கொண்டுள்ளதா என தேடிப்பார்க்க பாராளுமன்ற எதிர்க்கட்சி குழுவொன்றை நியமிக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளி்ட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் பிரேரணை ஒன்றை கையளித்துள்ளர்.

குறித்த பிரேரணை பாராளுமன்ற புதிய ஒழுங்குப்புத்தகத்திலும் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

குறித்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை மற்றும் மேலவை இலங்கை சபை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் கையொப்பத்துடனே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீ.எல். பீரிஸ், கயந்த கருணாதிலக்க,சந்திம வீரக்கொடி, நாலக்க கொடஹேவா, ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷண ராஜகருணா, சுஜித் சஞ்சய பேரேரா, டபிள்யூ. எச். தர்மசேன, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், புத்திக பத்திரண, உதய கம்மன்பில, திஸ்ஸ அத்தநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரே கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை மின்சாரசபையின் கட்டண திருத்தத்தில் சட்டப்பூர்வமான தன்மை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வமற்றதென தெரிந்துகொண்டால், பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை பரிந்துரைசெய்வதற்கும், குறைந்த வருமானமுடைய நுகர்வோர், வீடு, மத மற்றும் தொண்டு நிறுவன நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கி  கட்டண அமைப்பொன்றை தயாரிப்பதற்கு பரிந்துரை சமர்ப்பிப்பதற்காகவும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் குழுவொன்றை நியமிக்குமாறு குறித்த பிரேரணை மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.