திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

137 0

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.