பிரபல தமிழக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் ஒலிக்கப்போகும் மலையக மாணவியின் குரல்

86 0
மலையக மண்ணுக்கு இசையால் புகழ் சேர்க்கும் நோக்கில் கண்டியை சேர்ந்த மாணவி கே.அஷானி தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடும் வாய்ப்பை பெற்று இந்தியா சென்றுள்ளார்.

இவர் புசல்லாவை நயாபன தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கிறார்.

ஒரு பெருந்தோட்ட தொழிலாளரின் மகளான இவர் இயல்பாகவே பாடும் திறமை கொண்டவர்.

அண்மையில் இவர் பள்ளியில் பாடிய பாடல் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதன் மூலமே தமிழக தொலைக்காட்சியொன்று நடத்தும் சிறுவர்களுக்கான பிரபல இசை நிகழ்ச்சியின் தேர்வுப் போட்டியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்கள் நடுவர்களாக உள்ள அரங்கில் பாடுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இந்த தேர்வுப் போட்டியில் அஷானி தனது பாடும் திறமையால் தேர்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்டால் இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக குறித்த தொலைக்காட்சியின் இசை மேடையில் அவரது குரலும் இலங்கையின் அடையாளமாக ஒலிக்கும்.