மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது – சிறீலங்கா அரசாங்கம்!

283 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் அறிக்கையானது இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது எனவும் சிறீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

இதன்போது, 30/1 தீர்மானத்துக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கும் பெரியளவு வித்தியாசம் உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆராய்ந்துள்ளது. அத்துடன், 30/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடுகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு இதற்குத் தகுந்த பதிலளிக்கப்படும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பு பணியகம் ஒன்றை சிறீலங்காவில் அமைக்க வேண்டும் என்றும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள எல்லா தனியார் காணிகளையும் துரிதமாக மீள ஒப்படைக்க வேண்டும் என்றும், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்டத்தை வரைய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை மிகவும் சர்ச்சைக்குரியது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே இப்போதும் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் புதிதாக எதுவும் இல்லை.

எமக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கிடைக்கும். இதில் கலப்பு நீதிமன்றம் குறித்தோ, வெளிநாட்டு நீதிபதிகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.