ஆயிரம் வலிகள்!- வன்னியூர் குருஸ்-

270 0

ஆயிரமாய் ஏறிகணைகள் அங்கங்கே வந்து வீழ…
தாயங்கே தவிப்போடு தன்பிள்ளையைத்
தேடியோட ..
மாயங்கள் எனவாகிப் பேரவலம் பலவாகப்
போயெங்கு ஆறுவதோ பெறுவலி
சிறிதெல்லோ…!

ஆணவன் ஆதங்கம் காட்டிடக் காட்சியில்லை..
ஆணவம் கொண்டங்கே ஆற்றிய சாட்சியில்லை..
பாவமெம் தாயினம் காத்திடக் காவலில்லை..
பாரிலே மானிடம் தோற்றிய கோரமுண்மை…!

நீதியே நித்திரை போலெம்மைத் தீர்த்ததுண்மை…
வீதியல் விட்டெம்மைப் பாதியாய்ப் பார்த்ததுண்மை…
மீதியாய் தின்றெம்மைச் சாவுமாய்ச் சேர்த்ததுண்மை…
மேவியே எம்மண்ணைக் கோருதே ஏய்த்தெம்மை!

– வன்னியூர் குருஸ்