பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதையொட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐவளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால்,ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.